புதுக்கோட்டை மாவட்டத்தில், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 30,678 நபர்களுக்கு ரூ. 23.66 கோடி மதிப்பில் பல்வேறு உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 1,027 நோய்களுக்கான சிகிச்சைகளும், 154 தொடர் சிகிச்சைகளும், 38 வகையான நோய் கண்டறிதல் பரிசோதனைகளும், 8 வகையான உயர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வட்ட மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இத் திட்டத்தின் கீழ் ஏராளமான பொது மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 9 அரசு மருத்துவமனைகளில் 10,195 நபர்களுக்கு ரூ.13.65 கோடி மதிப்பீட்டிலும், 8 தனியார் மருத்துவமனைகளில் 4,441 நபர்களுக்கு ரூ.7.78 கோடி மதிப்பீட்டிலும், 7 நோய் கண்டறிதல் மையங்களில் 16,042 நபர்களுக்கு ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் நோய் கண்டறிதல் பரிசோதனைகளும் என பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 30,678 நபர்களுக்கு ரூ. 23.66 மதிப்பீட்டில் பல்வேறு உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.