ஆலங்குடி அருகிலுள்ள கோவிலூரில், அரசின் புயல் நிவாரணப்பொருள்களை வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு வீசிய கஜா புயலின் போது ஆலங்குடி வட்டத்தில் மரங்கள், நெல், வாழை. சோளம் உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் அழிந்தன. புயல் பாதிப்பு நிகழ்ந்து 9 மாதங்களுக்கு மேலாகியும், கோவிலூர் பகுதி மக்களுக்கு நிவாரணப்பொருள்கள் இதுவரை வழங்கப்படவில்லையாம்.
இந்நிலையில், மேலக்கோட்டையில் நிவாரணப்பொருள்கள் கொடுப்பதாக செவ்வாய்க்கிழமை தகவல் பரவியதையடுத்து, ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். ஆனால், அங்கு ஒரு சிலருக்கு மட்டும்தான் நிவாரணப்பொருள்கள் இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கோவிலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற ஆலங்குடி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலில் ஈடுபட்டோரை கலைந்து போகச் செய்தனர்.