புதுக்கோட்டை

வேளாண் பணி: விவசாயிகள் தயாராக இருக்க அறிவுறுத்தல்

27th Aug 2019 09:35 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி பாசனப் பகுதிகளில் வேளாண் பணிகளை மேற்கொள்ளும் வகையில் விவசாயிகள் தயார் நிலையில் இருக்க மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, மேட்டூர் அணை நிரம்பி பாசனத்துக்காக 
திறக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, திருவரங்குளம், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி ஆகிய வட்டாரங்களை உள்ளடக்கிய சுமார் 11,200 ஹெக்டேர் காவிரிப் பாசனப் பகுதிகளாகும்.  நிகழாண்டு சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் முன் கூட்டியே திறக்கப்படுவதால், காவிரி பாசன விவசாயிகள் நிலம் தயாரிப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.  விவசாயத்தில் அதிக மகசூல் பெறுவதற்கு தற்போதைய நிலையில் மண் வளத்தினை பாதுகாப்பதும், மண்வளத்தை மேம்படுத்துவதும் மிகவும் இன்றியமையாதது.  மண்வளம் பாதுகாத்து உயர் விளைச்சல் பெற்றிட நடவுக்கு முன்னர் பசுந்தாள் உர விதைகளைப் பயிரிட்டு மடக்கி உழவு செய்திட வேண்டும். சம்பா பருவத்துக்கு தேவையான உயர் விளைச்சல் ரக சான்று பெற்ற நெல் விதைகள் போதுமான அளவு அரசு வேளாண் விரிவாக்க மையங்கள்,   உரிமம் பெற்ற கூட்டுறவு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.   இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பு, இயந்திர நெல்நடவு, திருந்திய நெல் சாகுபடி, நெல் வரப்பில் உளுந்து சாகுபடி ஆகியவற்றை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு  வேளாண்மை துறை மூலம் மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆகவே விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க அலுவலரையோ அல்லது வேளாண் விரிவாக்க மையத்தையோ தொடர்பு கொண்டு தேவையான ஆவணங்கள் சமர்ப்பித்து பயனடையலாம். திறக்கப்படும் நீரை முறையாகவும், திறம்படவும் பயன்படுத்தி அதிக பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யவும், உயர் சாகுபடி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று விவசாயிகள் பயனடைய வேண்டும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT