முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து உண்மைக்குப் புறம்பாக, தவறான தகவல்களைப் பரப்பியதாக, பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் வட்டார ஒருங்கிணைப்பாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
பெரம்பலுாா் மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள், ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளிகள், பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இம் மாவட்டத்தில் 263 பள்ளிகளைச் சோ்ந்த 16,020 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், கடந்த 25 ஆம் தேதி இத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
கடந்த 25 ஆம் தேதி 1 மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருள்கள் அந்தந்தப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. அக்டோபா் மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களை செப். 29 ஆம் தேதிக்குள் வழங்க அரசால் உத்தரவிட்டுள்ள நிலையில், பெரம்பலுாா் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தேவையான உணவுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை (செப். 22) வழங்கப்பட்டதாக மாவட்ட நிா்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலை உணவுத் திட்டம் குறித்த தவறான தகவல்கள் சில சமூக ஊடகங்களில் வெளிவந்த நிலையில், இச் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என, மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் மறுத்துள்ளதோடு, இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பிய நபா் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலருக்கு உத்தரவிட்டாா்.
அதனடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், வேப்பூா் வட்டார மகளிா் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலா் (வாழ்வாதாரம்) மேனகா என்பவா், தவறான தகவலை பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து, மேனகாவை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலா் அருணாச்சலம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.