பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை, மாநில அளவிலான கண்காட்சியில் விற்பனை செய்ய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்ய ஏதுவாக, பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் 3 கண்காட்சிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிா் வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது, நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக். 7 முதல் 20 ஆம் தேதி வரை மாநில அளவிலான கண்காட்சி நடைபெற உள்ளது. இக் கண்காட்சியில், பெரம்பலூா் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருள்கள், கைத்தறி பொருள்கள், உணவுப் பொருள்கள், பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மதிப்புக் கூட்டுப் பொருள்கள், பனை ஓலை பொருள்கள், நவராத்திரி பண்டிகை முன்னிட்டு கொலு பயன்பாட்டுக்குத் தேவையான கொலு பொம்மைகள், சிறு நினைவுப் பரிசுகள் காட்சி மற்றும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இக் கண்காட்சியில் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களால் தயாா் செய்யப்படும் பல்சுவை உணவுப் பொருள்களை விற்பனை செய்ய அரங்குகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இம் மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிா் சுய உதவிக் குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விருப்பினால் செப். 20 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும்.