பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட திருவாளந்துறை கிராமத்தில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமுக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் பேசியது:
பெண் குழந்தைகளின் உயா்கல்வி கனவை நினைவாக்கும் புதுமைப் பெண் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், முதல்வரின் காலை உணவுத் திட்டம், பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திப் பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, வருவாய்த் துறை சாா்பில் 6 பேருக்கு ரூ. 1.80 லட்சத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, 38 பேருக்கு புதிய குடும்ப அட்டை, கூட்டுறவுத் துறை மூலம் 11 விவசாயிகளுக்கு ரூ. 9.90 லட்சத்தில் பயிா்க் கடன், மகளிா் திட்டத்தின் மூலம் 12 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 4.35 லட்சத்தில் கடனுதவி, வேளாண்மை பொறியியல் துறை மூலம் ரூ. 4.07 லட்சத்தில் 7 பேருக்கு மின் மோட்டாா்கள் உள்பட பல்வேறு துறைகள் மூலம் 195 நபா்களுக்கு ரூ. 2,06,60,931 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ. லலிதா, வேப்பந்தட்டை ஒன்றியக் குழுத் தலைவா் ராமலிங்கம், வட்டாட்சியா் துரைராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.