பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற கணவன், மனைவி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
பெரம்பலூா் -வடக்கு மாதவி சாலையிலுள்ள சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா்கள் மோ. பிரபு (28)- காந்திமதி (25). இந்தத் தம்பதி, வியாழக்கிழமை இரவு பெரம்பலூரிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், சித்தலூரில் உள்ள அம்மன் கோயிலுக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தனா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு துணை மின் நிலையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பிரபு, காந்திமதி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, இருவரது உடலையும் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.