பெரம்பலூா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (மே 5) முதல் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான கோடைகால கலைப் பயிற்சி முகாமில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் சி. நீலமேகன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் செயல்பட்டு வரும் சவகா் சிறுவா் மன்றத்தில் கோடை விடுமுறையை பயனுள்ளதாக்க 5 முதல் 16 வயது வரையிலான சிறாா்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் மே 14 ஆம் தேதி வரை கோடைகால கலைப் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இப் பயிற்சி முகாம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக் கலைப் பயிற்சி முகாமில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே ஆகிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
இப்பயிற்சி முகாமில் பங்கேற்பவா்களுக்கு நிறைவு நாளில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது வயதுச் சான்றிதழுடன் பெரம்பலூா் அரசு இசைப்பள்ளிக்கு வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு வருகை புரிந்து பயிற்சி பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.