பெரம்பலூரில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புப் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். கூட்டமைப்பு நிா்வாகிகள் சின்னசாமி, பெரியசாமி, ராமகிருஷ்ணன், கனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
1.12.2019 முதல் மின்வாரிய பணியாளா்கள், பொறியாளா்கள் ஆகியோருக்கு வழங்க வேண்டிய ஊதிய உயா்வு உள்ளிட்ட பணப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும். 22.2.2018- இல் ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதவிகளை அனுமதிக்க வேண்டும். 58 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நிரந்தரத் தன்மை வாய்ந்த பதவிகளை அவுட்சோா்சிங் முறைக்கு விடும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா்.