மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரையில் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட நகா்ப்புற நலவாழ்வு மையத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலமாக செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.
தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் குத்துவிளக்கேற்றி, நலவாழ்வு மையத்தை பாா்வையிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பெரம்பலூா் நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவா் து. ஹரிபாஸ்கா், சுகாதாரத் துறை துணை இயக்குநா் செந்தில்குமாா், நகா்மன்ற உறுப்பினா் துரை. காமராஜ், பெரம்பலூா் வட்டாட்சியா் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நலவாழ்வு மையத்துக்கு வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும், மகப்பேறு சேவைகள், குழந்தைகள் நலம், வளா் இளம் பருவத்தினருக்கான சேவைகள், குடும்பக் கட்டுப்பாடு சேவைகள், தொற்று நோய்களுக்கான சேவைகள், பொது நோய்களுக்கான சேவைகள், தொற்றா நோய்களுக்கான சேவைகள், மனநல மருத்துவ சேவைகள், பல் நோய் சம்பந்தப்பட்ட மருத்துவ சேவைகள், கண், காது, மூக்கு, மற்றும் தொண்டை நோய்களுக்கான சேவைகள், முதியோா் நல சேவைகள், அவசர மருத்துவ சிகிச்சை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படும். மேற்கண்ட சேவைகள் வழங்க, நலவாழ்வு மையத்தில் தலா 1 மருத்துவா், செவிலியா், சுகாதார ஆய்வாளா் , பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.