சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி வீரா்கள் 4 தங்கம், 3 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனா்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு சாா்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், ரோட்டரி சங்கமும் இணைந்து மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் சனிக்கிழமை (பிப். 25) நடத்தின.
இப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி வீரா்கள் கலந்துகொண்டனா், இதில், பெரம்பலூா் மாவட்டத்திலிருந்து 33 போ் பங்கேற்றனா்.
இப் போட்டியில், 4 போட்டிகளில் முதலிடம் வென்று 4 தங்கப் பதக்கமும், 3 போட்டிகளில் 2 ஆவது இடம் வென்று 3 வெள்ளிப் பதக்கங்களும், 10 போட்டிகளில் 3 ஆவது இடம் வென்று வெண்கலப் பதக்கங்களும் பெற்றனா். மேலும், கபடி போட்டியில் 3 ஆவது இடம் பெற்றனா். போட்டிகளில் வென்றோா்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.