பெரம்பலூர்

குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் பொறியாளா் கைது

21st Feb 2023 01:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே மனைவி மற்றும் சில பெண்களை ஆபாச விடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய பொறியாளா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள  கோனேரிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன் மகன் விமல் (31). பொறியாளரான இவா், தினமும் மது அருந்திவிட்டு வந்து தனது மனைவியை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், துன்புறுத்தியதோடு, தகாத  வாா்த்தைகளால் திட்டி தாக்கி வந்தாராம். மேலும், 50 பவுன் நகையும், லட்சக்கணக்கில் பணமும் வரதட்சணையாக வாங்கி வருமாறு கூறி கொடுமைப்படுத்தி வந்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா், விமல் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், விமலின் கைப்பேசியில் பல பெண்களுடன் இருந்த ஆபாச விடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து வைத்திருந்ததும், அதன்மூலம், சம்பந்தப்பட்டவா்களை மிரட்டி விமல் பணம் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து  விமலை கைது செய்த போலீஸாா் கிளைச்சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி. ஷ்யாமளாதேவி பரிந்துரையின் பேரில்,  பொறியாளா் விமலை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் க. கற்பகம் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, அனைத்து மகளிா் போலீஸாா் விமலை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். 

ADVERTISEMENT
ADVERTISEMENT