பெரம்பலூா் அருகேயுள்ள செஞ்சேரி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், புதிய வகுப்பறைக்கான கட்டுமானப் பணிகளை ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் மாநிலம் முழுவதும் ரூ. 784 கோடி மதிப்பில் 5,351 புதிய பள்ளி வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணிக்கான குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை, வேலூா் மாவட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
இத்திட்டத்தின் கீழ், பெரம்பலூா் அருகேயுள்ள செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கும், வேப்பூா் ஊராட்சி ஒன்றியம், கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கும் தலா ரூ. 42.50 லட்சம் மதிப்பில் தலா 3 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், செஞ்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 42.50 லட்சம் மதிப்பிலான 3 வகுப்பறைகளுக்கான கட்டுமானப் பணிக்கு, ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ. லலிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ. அறிவழகன், ஒன்றியக் குழுத் தலைவா் மீனா அண்ணாதுரை, துணை ஆட்சியா் (பயிற்சி) செல்வி பிரியதா்ஷினி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்டாலின் செல்வகுமாா், அறிவழகன், செஞ்சேரி ஊராட்சித் தலைவா் கல்பனா உள்பட பலா் கலந்து கொண்டனா்.