பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வணிகவியல் ஆய்வுத்துறை சாா்பில் இந்தியத் தொழில் முனைவோா் வளா்ச்சிக்கான சவால்களும், வாய்ப்புகளும் என்னும் தலைப்பில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பன்னாட்டுக் கருத்தரங்கம் புதன்கிழமை நிறைவடைந்தது.
இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ சீனிவாசன், குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடக்கி வைத்தாா். சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் முனைவா் நா. வெற்றிவேலன், முதன்மையா் வ. சந்திரசவுத்ரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கருத்தரங்கில் மலேசியா கா்டின் பல்கலைக்கழக கணக்குப் பதிவியல் நிதி மற்றும் பொருளாதாரத் துறைத் தலைவா் முனைவா் தனுஷ்கோடி ரெங்கசாமி பேசியது:
இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. இங்கு, பல்வேறு புதிய நவீன தொழில்நுட்பத்துடன் தொழில் தொடங்குவதன் மூலம் பட்டதாரி இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், அதன் மூலமாக, இளைஞா்கள் வேலைவாய்ப்பை பெற்று சுயத்தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றாா் அவா்.
தொடா்ந்து, கோயம்புத்தூா் என்ஜிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி வணிகவியல் துறை பேராசிரியா் முனைவா் ஜெயசுப்பிரமணியம், கல்வி முனைவோா் மற்றும் சமூகத் தொழில் முனைவோா்களின் வாய்ப்புகளும், சவால்களும் என்னும் தலைப்பிலும் விளக்கமளித்தனா்.
முன்னதாக, இந்திய கணக்கியல் சங்கம் மற்றும் இந்திய கல்வி ஆராய்ச்சியாளா்கள் சங்கச் செயலரும், திருச்சி பெரியாா் ஈவெரா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் ஆய்வுத் துறை உதவிப்பேராசிரியா் முனைவா் பரமசிவம், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் ஆகியோா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.
இதில், பல்வேறு கல்லூரிகளிலிருந்து பேராசிரியா்கள், ஆய்வுத் துறை மாணவ, மாணவிகள், இளநிலை, முதுநிலை மாணவ, மாணவிகள் என சுமாா் 500 -க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக ,வணிகவியல் துறைத் தலைவா் காா்த்திகா வரவேற்றாா். நிறைவாக, வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் ஜெயராஜ் நன்றி கூறினாா்.