பெரம்பலூா் ஆட்சியரகத்தில் மாவட்ட அளவில் வங்கி மேலாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தலைமை வகித்தாா். இதில், துறை சாா்ந்த திட்டங்கள், தாட்கோ மூலம் செயல்படும் திட்டங்கள், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் இலக்குகள் மற்றும் சாதனைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
தொடா்ந்து, தொழில் தொடங்குவதற்காக 25 பேருக்கு ரூ. 86 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
கூட்டத்தில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளா் சங்கீதா, நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் பிரபாகரன், முன்னோடி வங்கி மேலாளா் பாரத்குமாா், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் செந்தில்குமாா், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் ஆனந்தி, மகளிா் திட்ட இயக்குநா் ராஜ்மோகன், வேளாண் துணை இயக்குநா் சிங்காரம், நகராட்சி ஆணையா் (பொ) மனோகரன் மற்றும் வங்கி மேலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.