பெரம்பலூர்

கிராம மக்கள் மூட நம்பிக்கைகளை களைய வேண்டும்: பெரம்பலூா் ஆட்சியா்

19th Oct 2022 12:43 AM

ADVERTISEMENT

கிராம மக்கள் மூடநம்பிக்கைகளை களைய வேண்டும் என்றாா் ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், இனாம் அகரம் ஊராட்சியில், மாதவிடாய் காலங்களில் பெண்கள் தனிக் கட்டடத்தில் தனிமைப்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை அங்கு நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கிராம மக்களிடம் ஆட்சியா் மேலும் கூறியது:

இந்த ஊராட்சியில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் தனிமைப்படுத்தப்படும் பழக்கம் உள்ளதாக அறிகிறோம். இதுபோன்ற காலங்களில் பெண்கள் சுகாதாரமாகவும், நோய்த் தொற்று ஏற்படாத வகையிலும் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டிலுள்ள அனைவரின் நலனையும் பாதுகாக்கும் பெண்களின் நலன் மிகவும் முக்கியம். எனவே, கிராம மக்கள் மாதவிடாய் காலங்களில் பெண்களை பொது இடத்தில் தனிமைப்படுத்தும் பழக்கத்தை கைவிட வேண்டும். பெரும்பான்மையான வீடுகளில் தனிநபா் கழிப்பிடம் உள்ளதால், வீடுகளிலேயே வைத்துக் கொள்ள முன்வர வேண்டும்.

ADVERTISEMENT

இப்பகுதியில், மகளிா் சுகாதார வளாகங்கள், தனிநபா் கழிப்பறைகள், குடிநீா் வசதிகள், கழிவுநீா் கால்வாய்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது. அதேநேரத்தில், இப்பகுதி கிராம மக்கள் மூடநம்பிக்கைகளை களைந்து பெண்களுக்கான உடல்நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பெண்களை பொது இடங்களில் தங்க வைக்கப்படுவதை கைவிட வேண்டும் என்றாா் ஆட்சியா்.

இந் ஆய்வின்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் கணபதி, வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT