பெரம்பலூா் நகரில் உதயநிதி ஸ்டாலின் நடித்து, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நெஞ்சுக்கு நீதி என்னும் திரைப்படத்துக்கு வாழ்த்து தெரிவித்து, விளம்பர பதாகை வைத்த காவலா் மீது பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். இவண், இரா. கதிரவன், பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை என்னும் விளம்பர பதாகை பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. இதையறிந்த காவல்துறையினா், மேற்கண்ட பதாகையை உடனடியாக அகற்றி நகர காவல்நிலையத்துக்கு கொண்டுசென்றனா்.
இதுகுறித்து, பெரம்பலூா் நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் இளையபெருமாள் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்திருந்ததாக போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படையில் தலைமைக் காவலராக பணிபுரிந்த இரா. கதிரவன், கடந்த சில மாதங்களுக்கு முன் பாடாலூா் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். ஆனால், பணியில் சேரவில்லை. இதையடுத்து, கடந்த 28 ஆம் தேதி தஞ்சை மண்டலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டும் பணிக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.