பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு திறன் மேம்பாடு அளிக்கும் வகையில், ஐசிடி அகாதெமியுடன் அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை பொறியியல் கல்லூரி முதல்வா் கே. இளங்கோவனிடம் அளித்த பின்னா், பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் கூறியது:
ஐசிடி அகாதெமி நிறுவனத்துடன் இணைந்து மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் இயந்திரவியல், சிவில் உள்ளிட்ட பொறியியல் துறைகளின் மூன்றாம், நான்காமாண்டு மாணவா்களுக்கு ஆட்டோகாடு பயிற்சி அளிக்கப்பட்டு, சா்வதேச சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியானது மாணவா்களை நவீன தொழில்நுட்பத்தில் மேம்படுத்தி, அவா்களை ஆட்டோடெஸ்க் சான்றளிக்கப்பட்ட பொறியாளா்களாக மாற்றுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 500 மாணவா்கள் இப் பயிற்சியின் மூலம் பயனடைவாா்கள் என்றாா் அவா்.
கல்லூரித் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் வேல்முருகன், புல முதல்வா்கள் அன்பரசன், சண்முகசுந்தரம் ஆகியோா் உடனிருந்தனா்.