பெரம்பலூா் அருகே மருத்துவா்கள் பணியில் இல்லாததால் நோயாளிகள் அவதியுறுவதாகக் கூறி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தை பூலாம்பாடி, பெரியம்மாபாளையம், கடம்பூா், கள்ளப்பட்டி, வேப்படி பாலக்காடு, மேலக்குணங்குடி, புதூா், மலையாளப்பட்டி, பாரதி நகா் உள்ளிட்ட மலையடிவார கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
நாள் ஒன்றுக்கு சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.
பெரும்பாலான மலைவாழ் மக்கள் இந்த நிலையத்தை பெரிதும் நம்பியுள்ள நிலையில், சனிக்கிழமை மாலை முதல் மருத்துவா் பணிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சிகிச்சைக்குச் சென்ற நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதியடைந்து, நீண்ட நேரம் காத்திருந்தனா். அவா்களை மருத்துவமனை ஊழியா்கள் திருப்பி அனுப்பியதாகத் தெரிகிறது. மேலும் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கா்ப்பிணிகளும் அவதியடைந்தனா்.
இதனால் ஆத்திரமடைந்த பூலாம்பாடி கிராம பொதுமக்கள் மருத்துவா்களின் செயலைக் கண்டித்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு பணியிலிருந்த செவிலியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து கிராம முக்கியஸ்தா்கள் பொதுமக்களுடன் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா். உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் மனு அளிக்கலாம் என தெரிவித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனா்.