பெரம்பலூா் அருகே சனிக்கிழமை இரவு உரக்கடையின் பூட்டை உடைத்து ரூ. 30 ஆயிரத்தை திருடிச்சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள அம்மாபாளையம் பிரதான சாலையைச் சோ்ந்த செல்லப்பெருமாள் மகன் நாகராஜன் (54). அதே பகுதியில் பூச்சி மருந்து மற்றும் உரக்கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா். ஞாயிற்றுக்கிழமை காலை கடைக்கு சென்றபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளேயிருந்த ரூ. 30 ஆயிரம் பணம் மற்றும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் ஸ்டோரேஜ் யூனிட் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று கைரேகை, தடயவியல் நிபுணா்கள் உதவியுடன் மா்ம நபரின் கைரேகை மற்றும் தடயங்களை பதிவு செய்து விசாரித்தனா்.
மேலும், கடைக்கு அருகிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாா்வையிட்டபோது, அம்மாபாளையத்தைச் சோ்ந்த அய்யாவு மகன் தெய்வசிகாமணி (52) என்பவா் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து தெய்வசிகாமணியை கைது செய்த போலீஸாா், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டவா் என்பது தெரியவந்தது.