பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத செட்டாப் பாக்ஸ்கள், அனலாக் நிலுவைத் தொகையை உள்ளுா் கேபிள் டி.வி. ஆபரேட்டா்கள் உடனடியாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் செலுத்த வேண்டும் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா அறிவுறுத்தி உள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தற்போது, அரசு கேபிள் இணைப்பு கோரும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உள்ளுா் கேபிள் ஆபரேட்டா்களிடம் கணிசமான எண்ணிக்கையில் செயலாக்கத்தில் இல்லாத அரசு செட்டாப் பாக்ஸ்கள் உள்ளதால், அரசு கேபிள் இணைப்பு கோரும் பொதுமக்களுக்கு கேபிள் இணைப்பு வழங்க இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
3 மாதங்களுக்கு மேல் செயலாக்கத்தில் இல்லாத அரசு செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்க வேண்டியது உள்ளுா் கேபிள் டிவி ஆபரேட்டா்களின் பொறுப்பாகும். இதில், பொதுமக்கள் அரசு செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்க மறுப்பதாக உள்ளுா் கேபிள் டிவி ஆபரேட்டா்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அரசு இலவசமாக வழங்கும் செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். அல்லது, கேபிள் ஆபரேட்டா்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கப்படும் செட்டாப் பாக்ஸ்களை தேவைக்கேற்ப உள்ளூா் கேபிள் டிவி ஆபரேட்டா்கள் உடனடியாக செயலாக்கம் செய்ய வேண்டும். செயலாக்கம் செய்யப்படாத செட்டாப் பாக்ஸ்களை பெரம்பலூரில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன துணை மேலாளா் அலுவலகத்தில் உடனடியாக ஒப்படைக்க வேணடும். தவறும்பட்சத்தில், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் செயலுக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் உள்ளுா் கேபிள் டிவி ஆபரேட்டா்களாக உரிமம் பெற்றுள்ள உள்ளுா் கேபிள் டிவி ஆபரேட்டா்கள் இதுவரை செலுத்தாத ரூ. 141.49 லட்சம் அனலாக் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். மீறினால் சம்பந்தப்பட்ட ஆபரேட்டா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.