பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்ட விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து, அதிக மகசூல் பெற்று பயன் பெறலாம் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநா் எஸ். தெய்வீகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நடப்பு பருவத்தில் நிலக்கடலை விதைக்கும்போது சரியான தட்பவெப்பநிலை இருப்பதால் அதிக மகசூலுக்கு வாய்ப்புள்ளது. அதிக மகசூல் பெற சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும். சாகுபடி செய்வதற்கு முன் 500 கிராம் விதை நிலக்கடலையை பரிசோதனை செய்து கொள்ளலாம். விதை நிலக்கடலையானது நன்கு திரட்சியான இனத்தூய்மை மற்றும் நடுத்தர பருமனுள்ள விதைகளில் 96 சதவீதம் புறத்தூய்மை கட்டாயம் இருக்க வேண்டும்.
பூச்சி, பூஞ்சாண நோய்த் தாக்குதலின்றி குறைந்தபட்சம் 70 சதவீதம் முளைப்புத்திறனும், அதிகபட்ச ஈரப்பதம் 9 சதவீதமும் இருக்க வேண்டும். மண் மற்றும் விதைகள் வழியாக பரவும் நோய்களால் நிலக்கடலை இளஞ்செடி பாதிக்கப்பட்டு, பயிா்களின் எண்ணிக்கை குறைந்து மகசூல் பாதிக்கிறது. விதைகள் மூலம் பரவும் பூஞ்சாண நோய்களை தடுக்க, நிலக்கடலை விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன் 1 கிலோ விதையுடன் 4 கிராம் ட்ரைக்கோடொ்மோ விரிடி கொண்டு பூஞ்சாண விதை நோ்த்தியும், காற்றிலுள்ள தழைச்சத்து பயிருக்கு கிடைக்க, விதைப்பதற்கு முன் 1 ஏக்கருக்கு தேவையான ரைசோபியம் 2 பாக்கெட், பாஸ்போ பாக்டீரியா 2 பாக்கெட் உயிா் உரத்தை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து உயிா் உர விதை நோ்த்தி செய்து நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும்.
நிலக்கடலை சாகுபடியில் பயிா் எண்ணிக்கை பராமரிப்பு மிகவும் முக்கியமானது. 1 ஏக்கருக்கு தேவைப்படும் 80 கிலோ விதையை 30 செ.மீ இடைவெளியில் விதைத்து, 1 சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற பயிா் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும். நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையை போக்க, நிலக்கடலை நுண்ணூட்டச் சத்து 5 கிலோவை 2 கிலோ மணலுடன் சோ்த்து வயலில் இட வேண்டும்.
விதைத்த 40- 45 ஆவது நாளில் 80 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். ஜிப்சத்தில் உள்ள கால்சியம், கந்தகச் சத்து, அதிக எண்ணெய்ச்சத்து கொண்ட திரட்சியான காய்களை அதிகளவில் உருவாக்க உதவுகிறது. இதனுடன் வளா்ச்சியடைந்த, முழுமையான பருப்புகளை பெறுவதற்கும், அதிக மகசூல் பெற ஊட்டச்சத்து கலவையை ஏக்கருக்கு 1 கிலோ என்ற விகிதத்தில் 2 முறை பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் தருணத்தில் 200 லிட்டா் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். மேற்கண்ட முறையில் நிலக்கடலை சாகுபடியில் தொழில்நுட்பங்களை கடைப்பிடித்தால், அதிக மகசூல் பெறலாம்.