விவசாயிகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டுமென, விவசாய தொழிலாளா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம் பெருமத்தூரில், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் வேப்பூா் வட்டார மக்கள் கோரிக்கை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.
இம் மாநாட்டுக்கு, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட துணைச் செயலா் எஸ். ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் அ. பழனிசாமி சிறப்புரை ஆற்றினாா்.
மாவட்டத் தலைவா் ஏ. கலையரசி, மாநிலக் குழு உறுப்பினா் பி. ரமேஷ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
இக் கூட்டத்தில், வேப்பூா் பகுதியில் நடைபெறும் தொடா் திருட்டை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். வேப்பூா் ஒன்றியத்திலுள்ள நீா்நிலைகளில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கியில் கறவை மாட்டுக் கடன் வழங்க வேண்டும். மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும். பெருமத்தூரில் சமுதாயக் கூடம் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், விவசாய தொழிலாளா் சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.