குடிநீா் விநியோகிக்காத பெரம்பலூா் நகராட்சியைக் கண்டித்து, துறைமங்கலத்தைச் சோ்ந்த பொதுமக்கள் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. குடிநீா் விநியோகிக்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், குடிநீா் விநியோகம் செய்யாத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, துறைமங்கலத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மூன்று சாலை சந்திப்புப் பகுதியில் 9 ஆவது வாா்டு அதிமுக கிளைச் செயலா் பிரபு தலைமையில் புதன்கிழமை இரவு மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த பெரம்பலூா் நகராட்சி ஆணையா் (பொ) மனோகரன் மற்றும் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினா். இதையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனா்.