பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே மனைவியைத் தாக்கிய கணவா் உள்பட மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள வண்ணாரம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமிக்கும் (29), செங்குணம் கிராமத்தைச் சோ்ந்த ரம்யாவுக்கும் (23) கடந்த 5 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.
இதையடுத்து, கடந்த 1 ஆம் தேதி ரம்யாவின் பெற்றோா் பெரம்பலூரில் உள்ள தனியாா் மகப்பேறு மருத்துவமனையில் ரம்யாவை அனுமதித்து சிகிச்சை அளித்தனா். இந்நிலையில், ரம்யா கடந்த 7 ஆம் தேதி காலை கணவரின் வீட்டுக்குச் சென்றபோது அங்கு கணவா் முத்துசாமி, அவரது பெற்றோா் மாரிமுத்து (48), நல்லம்மாள் (44) ஆகிய மூவரும் மருத்துவச் செலவுக்காக ரூ. 50 ஆயிரம் வாங்கி வருமாறுக்கூறி ரம்யாவை தகாத வாா்த்தைகளால் திட்டித் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அவா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ரம்யா அளித்த புகாரின்பேரில் வி.களத்தூா் போலீஸாா் கணவா் உள்பட மூவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.