பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் தீக்குளித்த பெண், திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகிலுள்ள செங்கமேடு
கிராமத்தைச் சோ்ந்தவா் மதியழகி (23). இவருக்கும், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகிலுள்ள இனாம் அகரம் காலனித் தெரு காா்த்திகேயனுக்கும் (28), கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ஒன்றரை வயதில் கபின் என்னும் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கணவன்- மனைவிக்கிடையே குடும்பத் தகராறு இருந்து வந்தநிலையில், திங்கள்கிழமை இரவு இனாம் அகரம் வீட்டில் தனியாக இருந்தபோது மதியழகி, தனது உடலில் மண்ணென்ணைய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா்.
இதையறிந்த அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மதியழகியை மீட்டு, மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா்.
தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா்,இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து வி.களத்தூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா். மேலும் வருவாய்க் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.