பெரம்பலூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், தொழில் தொடங்குவதற்காக ரூ. 6 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது.
பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் அளித்து, மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாகச் சென்றடையுமாறு பணியாற்ற வேண்டுமென அரசுத்துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களில் பண்ணைசாரா தொழில் முனைவோா்களை மேம்படுத்தும் வகையில் 12 பயனாளிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் டீ கடை, மளிகைக் கடை, அழகு நிலையம், உணவகம், மாட்டுத் தீவன விற்பனை, துணிக்கடை தொடங்க காசோலைகள் வழங்கப்பட்டன.
இதில், முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடனுதவி, வீட்டுமனைப் பட்டா, விதவை உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக்கடன், இலவச தையல் இயந்திரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 265 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. லலிதா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் கணபதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.