பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா், வேப்பூரில் உள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளா்கள் குடும்பத்துடன் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்கலைக் கழக ஆசிரியா்கள் சங்கம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் மற்றும் தற்காலிக அலுவலகப் பணியாளா்கள் கல்லூரி வளாகத்தில் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இப் போராட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்ட அமைப்பாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.
கௌரவ விரிவுரையாளா்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்தும், நிலுவையிலுள்ள ஊதியத் தொகையை உடனே வழங்கக் கோரியும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதேபோல், வேப்பூரிலுள்ள அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரே, கல்லூரி பேராசிரியை கலைவாணி தலைமையிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.