கழைக் கூத்தாடிகளுக்கு ஜாதிச்சான்றிதழ், நிரந்தர வீடு கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழமாத்தூா், துா்கையம்மன் நகரில் வசிக்கும் கழைக் கூத்தாடிகள் குடும்பங்களுக்கு, மேலமாத்தூா் மருதையான் கோயில் பகுதியிலுள்ள தனியாா் திருமண அரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்று 21 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், வேட்டி, சேலை ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
இங்கு வசிக்கும் கழைக்கூத்தாடி குடும்பத்தினா்களுக்கு, அவா்கள் குடியிருக்கும் இடத்திலேயே நிரந்தர வீடு கட்டித்தரவும், பழங்குடியின பிரிவினருக்கான ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
விரைவில் ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கவும், குடியிருப்புகள் கட்டித்தரவும் வட்டாட்சியா் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் வற்புறுத்த உள்ளேன். வெள்ளத் தடுப்பு, கரோனா தடுப்பு உள்ளிட்ட தமிழக முதல்வா் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றாா் திருமாவளவன்.