பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யக்கூடாது என வலியுறுத்தி, பெரம்பலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரம் வெள்ளிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.
வேலூா் மாவட்டத்தில் அண்மையில் பேருந்து படிக்கட்டில் நின்று பயணித்த 10-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்கள் பலத்த காயமடைந்தனா். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூா் மாவட்டத்தில் பயணிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவிட்டாா்.
அதனடிப்படையில், பெரம்பலூா் புகா் மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பழனிசாமி தலைமையிலான குழுவினா்,
பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணம் மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், இதர பயணிகளுக்கும் அறிவுரை வழங்கி, விழிப்புணா்வு துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்தனா்.
மேலும் அரசு மற்றும் தனியாா் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றக்கூடாது. பயணிகளை படிக்கட்டில் நிற்க வைக்காமல் உள்ளே அனுமதிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.