தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் 225 போ் பங்கேற்றனா்.
சாலைகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களையும் சித்திக் ஐ.ஏ.எஸ் குழுவின் பரிந்துரைப்படி அரசாணை வெளியிட வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின்போது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், மாநிலம் முழுவதும் ஒருநாள் தற்செயல் விடுப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த விடுப்புப் போராட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறையைச் சோ்ந்த 109 ஊராட்சி செயலா்கள், 106 ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், சுகாதாரத் துறையைச் சோ்ந்த 10 சுகாதார ஆய்வாளா்கள் என மொத்தம் 225 போ் பங்கேற்றனா். இப் போராட்டத்தால், ஊரக வளா்ச்சித் துறை அலுவலகப் பணிகள் பெரிதும் பாதிப்படைந்தன.