பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபடுபவா்கள், தந்தை பெரியாா் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை சிறப்பிக்கும் வகையில், ஆண்டு ஆண்டும் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு ரூ. 1 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கப்படும்.
அதன்படி, நிகழாண்டில் தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது வழங்குவதற்கு உரிய விருதாளா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளது. எனவே, பெரம்பலூா் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகளை, விண்ணப்பதாரா் தங்களது பெயா், சுய விவரம் மற்றும் முழு முகவரியுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை அக்டோபா் 31- ஆம் தேதிக்குள் அளிக்கலாம்.