ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம், பெரம்பலூர் ஒன்றியத்துக்குள்பட்ட பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கணக்கெடுப்பு பணி திங்கள்கிழமை தொடங்கியது.
பணியைத் தொடக்கி வைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேவகி பேசியது:
பெரம்பலூர் கடைத்தெரு, எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகர், கவுல்பாளையம் மலைப்பகுதி, குரும்பலூர் தோப்பு, எசனை, ரெட்டைமலைசந்து மற்றும் வடக்குமாதேவி ஏரிக்கரை ஆகிய பகுதிகள் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பகுதியாகக் கருதப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பு மே 25 வரை நடைபெறுகிறது என்றார் அவர்.
ஆசிரியர் பயிற்றுநர்கள் அனுராதா, பாலசுப்பிரமணி, செந்தாமரைச்செல்வி, செல்வி, ராஜாத்தி, சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் கள ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பெரம்பலூர் மதனகோபாலபுரம், சாலைகளில் உள்ள கடைகளில் குழந்தைகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனரா, பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து ஆய்வு செய்தனர்.