இழிவாக பேசிய வழக்கு: மே 6-இல் ஆஜராக பேராயர் சற்குணத்துக்கு உத்தரவு
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சமுதாய மக்களை, பாமக நிறுவனர், இளைஞரணி தலைவர் ஆகியோரை இழிவுபடுத்தி பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், மே 6 ஆம் தேதி நீமன்றத்தில் ஆஜராக பேராயர் சற்குணத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஓலைப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் வழக்குரைஞர் தங்கதுரை, பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நடுவர் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:
அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் நடைபெற்ற பிரச்னைக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 24 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சென்னை, கீழ்ப்பாக்கம் இவாஞ்சலிக்கல் சர்ச் ஆப் இந்தியாவை சேர்ந்த பேராயர் எஸ்.ரா. சற்குணம் என்பவர், வன்னிய சமுதாய மக்களை, பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை இழிவுபடுத்திப் பேசியதோடு, அவதூறாகவும், சமூக நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் பேசியுள்ளார்.
எனவே, பேராயர் சற்குணம் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்கவும், மன உளைச்சலுக்கும், அவமானத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி அசோக்பிரசாத், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும், வரும் 6 ஆம் தேதி நடக்கும் வழக்கு விசாரணைக்கு பேராயர் எஸ். ரா. சற்குணம் ஆஜராகவும் உத்தரவிட்டார்.