பெரம்பலூர் மாவட்டம், மங்கூன் கிராமத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், மங்கூன் கிராமத்தில் கடந்த சில வாரங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட மற்றும் ஊராட்சி நிர்வாக அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தடையின்றி, முறையான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி காலிக்குடங்களுடன் பெரம்பலூர்- துறையூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் பாடாலூர் போலீஸார் அங்கு சென்று, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், பெரம்பலூர்- துறையூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.