பெரம்பலூர் மாவட்டத்துக்கான நடமாடும் வங்கி வாகனச் சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், பெரம்பலூர் மாவட்டத்துக்கான பிரத்யேகமாக நடமாடும் வங்கி வாகனச் சேவையை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தொடங்கி வைத்தார்.
இந்தச் சேவையானது, கிராமப்புற மக்களின் வங்கி தொடர்பான தேவைகளான பணப் பரிவர்த்தனை, சேமிப்புக் கணக்கு தொடங்குதல், பல்வேறு கடன் திட்டங்கள், பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டங்கள் ஆகியவற்றை அவர்களது இருப்பிடத்துக்குச் சென்று வங்கி சேவையாளர் மூலம் வழங்கப்படும். மேலும், இந்த நடமாடும் வங்கி வாகனத்தில் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம், பாஸ் புக் அச்சிடும் இயந்திரம் உள்ளடக்கிய வசதிகளும் உள்ளன.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை பொது மேலாளர் நாரயண், கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் ஜெ. அகல்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.