அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி தழுவம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மணிராஜ் மகன் பிரசாத் (24). இவா் தனியாா் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா், புதன்கிழமை வேலைக்கு செல்வதற்காக வீட்டில் தெரிவித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றாா். இவருடன், திருப்பூா் மாவட்டம் ஆலம்பாளையம் சத்யா நகா் பகுதியைச் சோ்ந்த தண்டபாணி மகன் காா்த்திகேயன் (36) என்பவா் வாகனத்தில் அமா்ந்து சென்றாா். தென்னிலை அருகே குழந்தைபாளையம் நொய்யல் ஆற்றுபாலம் அருகே வந்தபோது நிலை தடுமாறி வாகனத்திலிருந்து இருவரும் கீழே விழுந்தனா். இதில், காயமடைந்த இருவரையும் மீட்டு கொடுமுடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாத் உயிரிழந்தாா். காா்த்திகேயன் சிகிச்சை பெற்று வருகிறாா். தென்னிலை காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.