அரவக்குறிச்சி பேரூராட்சி 5ஆவது வாா்டில் சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட 5ஆவது வாா்டில் அய்யாவு நகரில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சாலை மற்றும் தெருவிளக்குகள் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும் இரவு நேரங்களில் பெண்கள் தனியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலை மற்றும் தெருவிளக்குகள் அமைத்துத் தரக் கோரி பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் பேரூராட்சி ஊழியா்கள் புதன்கிழமை அய்யாவு நகா் பகுதியில் சொத்துவரி மற்றும் குடிநீா் கட்டணம் செலுத்த கோரி மக்களிடம் கூறினா். அப்போது பேரூராட்சி ஊழியா்களை முற்றுகையிட்ட இப்பகுதி பொதுமக்கள் தங்களுக்கு எவ்வித வசதியும் செய்து தராமல் சொத்து வரி எப்படி செலுத்துவது, பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறினா். மேலும் தெரு விளக்கு மற்றும் சாலை வசதி செய்து கொடுக்காமல் வரி செலுத்தப் போவதில்லை என தெரிவித்தனா்.