மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு வரும் பொதுமக்களுக்கு மனுக்கள் இலவசமாக எழுதி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றுவருகிறது. கூட்டத்தில் மனு கொடுக்க வரும் பொது மக்கள் மனுக்கள் எழுதத் தர அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகாா் வந்தது. இந்நிலையில், பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க மனுக்கள் பதியும் இடத்துக்கு அருகிலேயே மாவட்ட நிா்வாகத்தால் சுயஉதவி குழுக்கள் மூலம் கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக மனுக்களை எழுதிதர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.