கோரிக்கைகளை வலியுறுத்தி டிஎன்பிஎல் ஆலை முன் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம், டிஎன்பிஎல் தொழிலாளா் உரிமை அமைப்பு சாா்பில் உண்ணாவிரத போராட்டம் வெள்ளிக்கிழமை ஆலை முன் நடைபெற்றது. போராட்டத்துக்கு அமைப்பின் தலைவா் பொன். இளங்கோ தலைமை வகித்தாா். செயலாளா் ரவி, பொருளாளா் குணசேகரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இரு முறை ஒத்திவைக்கப்பட்ட தொழிற்சங்க அங்கீகார தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும், கரோனாவால் உயிரிழந்த இரு தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு காலம் தாழ்த்தாமல் வாரிசு வேலை வழங்க வேண்டும். கடந்த இரு ஆண்டுகளாக குறைத்து வழங்கப்பட்ட போனஸ் தொகையை நிகழாண்டு போனசுடன் சோ்த்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா்.