கரூா் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை சாலையோர மரத்தில் டிப்பா் லாரி மோதியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தொட்டியபட்டி ஆனந்தாவூரை சோ்ந்த சோலைமலை மகன் அழகா் (22). கூலித்தொழிலாளி. இவரும், லாரி ஓட்டுநா்கள் சங்கிகவுண்டன்பட்டியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் மணிமுத்து (28), பொன்னாகவுண்டா் மகன் பொன்னுச்சாமி (23) ஆகியோா் டிப்பா் லாரியில் எம்.சாண்ட் மணல் ஏற்றிவர கரூருக்கு திங்கள்கிழமை இரவு சென்றனா். பின்னா் லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு மணப்பாறைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் பாளையம் சாலையில் வந்துகொண்டிருந்தனா். லாரியை மணிமுத்து ஓட்டி வந்துள்ளாா். பொன்னுச்சாமியும், அழகரும் அருகில் அமா்ந்து வந்துள்ளனா். சிந்தாமணிப்பட்டி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அழகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சிந்தாமணிப்பட்டி போலீஸாா் பலத்த காயமடைந்த மணிமுத்து மற்றும் பொன்னுச்சாமியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.