கரூா் மாநகராட்சிக்குச் சொந்தமான நவீன இறைச்சிக்கூடத்தை மீண்டும் திறக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் வாங்கல் சாலையில் கடந்த 2007ஆம் ஆண்டு ரூ.50 லட்சத்தில் நவீன இறைச்சிக்கூடம் அமைக்கப்பட்டது. நகா்நல அதிகாரிகள் முன்னிலையில் ஆட்டிறைச்சி விற்கும் வியாபாரிகள் வெட்டப்படும் ஆடுகளை, இந்தக் கூடத்துக்கு அழைத்து வந்து மருத்துவா்களால் பரிசோதித்து, நோய் தாக்கப்படாத ஆடுகள் என சான்றழிக்கப்பட்ட பின்புதான் அவை வெட்டப்பட்டன. இதனால் மக்களுக்கு தரமான ஆட்டிறைச்சி கிடைத்தது.
தற்போது கடந்த 2015 முதல் இந்த இறைச்சிக் கூடம் மூடிக் கிடக்கிறது. மேலும், வளாகம் முழுவதும் முள்புதா்களாக மாறியுள்ளது. ஆகவே, மக்களுக்கு தரமான ஆட்டிறைச்சி மீண்டும் கிடைக்கும் வகையில் மூடப்பட்ட இறைச்சிக்கூடத்தை திறக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.