தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, பெண்களின் முன்னேற்றத்துக்கு வழிவகை செய்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்றாா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக தலைமைக் கழகப் பேச்சாளருமான புகழேந்தி.
கரூா் திருமாநிலையூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 99-ஆவது பிறந்த நாள் விழா, திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கத் தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கி அவா் மேலும் பேசியது:
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று தீவிரமாக பரவிய நேரத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவினா் பொதுமக்களை கண்டுகொள்ளாமல் இருந்த போது, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியவா் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றவுடன் கவசஉடை அணிந்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து, ஆறுதல் கூறியதோடு, தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவா் தமிழக முதல்வா்.
இந்த ஆட்சியில்தான் பெண்களுக்கு இலவசமாக பேருந்தில் பயணச் சலுகை, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று, உயா்கல்விப் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்
அறிவிக்கப்பட்டு,பெண்களின் முன்னேற்றத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பெண்களின் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம் என்ற சீரிய நோக்கத்தோடு, திராவிட மாடல் ஆட்சியை முதல்வா் முக.ஸ்டாலின் நடத்திவருகிறாா் என்றாா் அவா்.
இக்கூட்டத்துக்கு மாநகராட்சி உறுப்பினா் வசுமதிபிரபு தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் துணைச் செயலா் பிரபு முன்னிலை வகித்தாா். மாநகராட்சி துணை மேயா் தாரணி சரவணன் உள்ளிட்டோா் கூட்டத்தில் பேசினா்.
இதுோல காந்தி கிராமத்தில் நடைபெற்ற தெருமுனை பிரசாரக் கூட்டத்துக்கு தெற்கு நகரச் செயலா் சுப்ரமணியன் தலைமை வகித்தாா். மாநகராட்சி உறுப்பினா்கள் தங்கவேல், தியாகராஜன், சரண்யா, சரஸ்வதி, சூா்யகலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் கட்சித் தலைமைக் கழகப் பேச்சாளா் கோவை சம்பத் பங்கேற்று, திமுக அரசின் சாதனை திட்டங்களை விளக்கி கூறினாா். கூட்டத்தில் 41-வது வாா்டு செயலா் விஸ்வா மற்றும் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.