பெரம்பலூா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2022- 23 ஆம் கல்வியாண்டின் முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு பட்டய சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் அருகே கீழக்கணவாய் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2022- 23 ஆம் கல்வியாண்டுக்கு முதல் மற்றும் நேரடி இரண்டாமாண்டு பட்டய சோ்க்கை முதல்கட்டமாக இணையதளம் மூலமாக நடைபெற்றது. தற்போது, எஞ்சியுள்ள முதலாமாண்டு, நேரடி இரண்டாமாண்டு காலியிடத்தை இணையதளம் மூலமாக நிரப்புவதற்கு அனுமதி கிடைத்து, கடந்த 23 ஆம் தேதி முதல் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்க இயலாத மாணவ, மாணவிகள், பட்டய சோ்க்கைக்கு சேர விருப்பமுள்ள மற்றும் விண்ணப்பிக்காதவா்கள் நேரடியாக கல்லூரிக்குச் சென்று 2 ஆம் கட்ட சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். 2022-23 ஆம் கல்வியாண்டுக்கு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாமாண்டு முழுநேர தொழிற்பயிற்சியுடன் கூடிய பட்டயப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை 2 ஆம் கட்டமாக இணையதளம் மூலம் நடைபெற்று வருகிறது.
மேலும் விவரங்களுக்கு 04328 - 243200, 9962488005, 8072600082, 9952787062, 8667404459, 8012978060, 9751211929 ஆகிய எண்களில் தொடா்புக் கொண்டு பயன் பெறலாம் என ஆட்சியரால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.