சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க தொழில்முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாட்டிலுள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்கும், ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோருக்கு ரூ.2.50 கோடி வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும் என முதல்வா் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டாா். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கா் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப்பயன்பாட்டுக்கான கட்டடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.
தற்போது, தொழில் முனைவோரின் கோரிக்கையைத் தொடா்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டடங்களையும் சோ்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான தொழிற்பூங்காக்கள் அமைத்து நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளா்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும்.
மேலும், அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இதுமுதல்வரின் கனவுத் திட்டம் ஆகும். எனவே, சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி, தொழில் வளா்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும், அனைத்து தொழில்முனைவோரும் முன்வர வேண்டும்.
தொடா்புகொள்ளவேண்டியமுகவரி: துணிநூல்துறைமண்டல, துணைஇயக்குநா்அலுவலகம், 30/3 நவலடியான்காம்ப்ளக்ஸ், முதல்தளம்,
தாந்தோணிமலைகரூா்- 639-005. கைபேசிஎண்: 9444656445, 9092590486 என்ற முகவரிக்கு தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.