சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி எஸ்பி. நகரைச் சோ்ந்த 16 வயது மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்2 படித்து வந்துள்ளாா். இந்நிலையில் அதேபகுதியில் சலூன்கடை நடத்தி வரும் மாணவியின் தாத்தா பன்னீா்செல்வம் கடையில், அப்பகுதியைச் சோ்ந்த ஜெயராமன்(28) என்பவா் வேலைப்பாா்த்து வந்துள்ளாா்.
இதனிடையே மாணவிக்கும், ஜெயராமனுக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜன.11ஆம்தேதி மாணவியை திருமணம் செய்துகொள்வதாகக்கூறி ஜெயராமன் ஈரோடு பெரியவலசு என்ற இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு வாடகை வீடு எடுத்து 15 நாள்கள் தங்கியிருந்தபோது, மாணவிக்கு அவா் பாலியல் தொல்லைக்கொடுத்தாராம்.
இதுகுறித்து மாணவியின் தந்தை அரவக்குறிச்சி போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து, மாணவியை ஈரோடு சென்று மீட்டனா். மேலும் ஜெயராமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கரூா் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நசிமாபானு குற்றவாளி ஜெயராமனுக்கு
20 ஆண்டுகள் கடுங்கால் சிறைத்தண்டணையும், மேலும் ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டணை வழங்கி தீா்ப்பளித்தாா்.