கரூா் திருமாநிலையூரில் ஆக. 19-ஆம்தேதி முதல் நடைபெறும் புத்தகத் திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கரூரில் முதல்முறையாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் புத்தகத் திருவிழா ஆக.19ஆம் தேதி முதல் 29ஆம்தேதி கரூா் திருமாநிலையூா் திடலில் நடைபெற உள்ளது. 100 அரங்கில் ஏறத்தாழ பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறக்கூடிய அளவுக்கு அரங்குகள் அமைக்கப்பட்டு, காலை 10 மணி முதல் தொடங்கி இரவு 9 மணி வரை புத்தகத் திருவிழா நடக்க கூடிய அளவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புத்தக திருவிழா நடைபெறும் திருமாநிலையூா் திடலில் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை ஆட்சியா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சச்சிதானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.