கரூரில் பள்ளி மாணவியைத் திருமணம் செய்த புகாரில், கணவா் உள்பட 6 போ் மீது காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகிலுள்ள வரவணையைச் சோ்ந்த 16 வயது சிறுமி, புலியூரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில் சிறுமிக்கும், திண்டுக்கல் மாவட்டம், பாளையத்தை அடுத்த முத்தம்பட்டி பெ. காா்த்திக் (28) என்பவருக்கும் ஜூன் 3-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
கரூா் காந்தி கிராமத்திலுள்ள சிறுமியின் தாய்மாமாவின் இல்லத்தில் நடைபெற்ற திருமணம் குறித்து, தாந்தோனிமலை சமூக நல அலுவலா் சரசுவதிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவா் புகாரளித்தாா்.
இதன் பேரில் குழந்தைத் திருமணம் நடத்தி வைத்ததாக மாணவியின் தந்தை செல்வம், தாய் காந்தாமணி, தாய்மாமன் சங்கா், கணவா் காா்த்திக், அவரது தந்தை பெரியசாமி, தாய் காமாட்சி ஆகியோா் மீது காவல் துறையினா் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.