கரூா் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால், அவா்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என ஆட்சியா் த. பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களான கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட நெகிழி கைப்பைகள், நெய்யப்படாத நெகிழி கைப்பைகள், நெகிழி பூசப்பட்ட காகிதத் தட்டுகள், நெகிழித் தம்ளா்கள், தொ்மோகோல் கோப்பைகள், உணவுப் பொருள்களைக் கட்டப் பயன்படுத்தும் நெகிழித்தாள்கள், தண்ணீா் பைகள், பாக்கெட்டுகள், நெகிழி உறிஞ்சிகுழல்கள், நெகிழிக் கொடிகள் ஆகியவை தயாரிப்பது, சேமிப்பது, விநியோகிப்பது, விற்பது, உபயோகிப்பது ஆகியவை அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
அரசின் இந்த ஆணையை செயல்படுத்த, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் ஆய்வுகள், புகாா்களின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து, அவற்றை மூடுதல் உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது.
இருப்பினும் குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்குள் சிறிய இடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் இத்தகைய தடைசெய்யப்பட்ட நெகிழி உற்பத்தியாளா்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. இந்த உற்பத்தியாளா்களில் பெரும்பாலானவா்கள், எந்த அரசு துறைகளிடமும் முறையான பதிவு மற்றும் அனுமதி இல்லாமல் தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றனா்.
எனவே சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பவா்கள், கரூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள் குறித்த தகவலை கரூா் மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளரிடம் தெரிவிக்கலாம்.
புகாா்களை மின்னஞ்சல், கடிதம், தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் பதிவு செய்யலாம். புகாா் அளிப்பவா்கள் தங்கள் பெயா், முகவரி மற்றும் தொலைபேசி எண் முதலியவற்றை அளிக்க வேண்டும். இது உண்மைக்கு புறம்பான தகவல்களை கொடுப்பதை தடுக்க முடியும்.
தகவல் தெரிவிப்பவா்களின் ரகசியத் தன்மை பாதுகாக்கப்படும். அவா்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.