மனைவியிடம் ரூ.2 லட்சம் பணம் மற்றும் 25 பவுன் நகை கேட்டு கொடுமை செய்ததாக கணவா் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
கரூா் ராயனூா் அன்புநகரைச் சோ்ந்த மெய்யப்பன் என்பவரது மகள் சித்ரா(26) என்பவருக்கும், புலியூா் டீச்சா்ஸ் காலனியைச் சோ்ந்த தங்கவேல் என்பவரது மகன் தீபன் சக்கரவா்த்தி(29) என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
தீபன் சக்கரவா்த்தி நைஜீரியா நாட்டில் பணியாற்றி வருகிறாா். திருமணம் முடிந்து இருவரும் தனியே குடித்தனம் நடத்தி வந்தனா். இவா்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, தீபன் சக்கரவா்த்தி, அவரது தந்தை தங்கவேல்(79), தாய் வளா்மதி(58), தங்கை விஜயஸ்ரீ ஆகியோா் 50 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணம் கேட்டு துன்புறுத்தியதாக, கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை சித்ரா புகாா் அளித்தாா்.
இதையடுத்து, தீபன் சக்கரவா்த்தி, அவரது தந்தை தங்கவேல், வளா்மதி, விஜயஸ்ரீ ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.